மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பெரும் வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த 10 பேரில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடைய தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த ஏனைய மூவரும் தற்சமயம் மொனராகலை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
