இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் நீண்ட விசாரணையின் பின்னர் இந்தத் தீர்ப்பை இன்று செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, அரச நிறுவனமான ‘ஶ்ரீலங்கன் கெட்டரிங்’ நிறுவனத்தின் கணக்கிலிருந்து மாரவிலைச் சேர்ந்த தனியார் கேடரிங் நிறுவனமொன்றுக்கு 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா செலுத்தியமை தொடர்பில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
விமான சேவைகள் அமைச்சராகப் பதவியில் இருந்த பிரியங்கர ஜயரத்ன, ‘ஶ்ரீலங்கன் கெட்டரிங்’ நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியைப் பயன்படுத்தி மேற்படி பணத்தைக் கொடுக்குமாறு செல்வாக்குச் செலுத்தினார் ஈப்ரு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் மீதான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஏழு வருட காலக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
