நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின் நீர்மின் நிலையத்தோடு தொடர்புடைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேல் த்ரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் சஞ்சய் சா (இயந்திரவியல் மேலாளர்) மற்றும் கபீர் மகர்ஜன் (இயந்திரவியல் மேற்பார்வையாளர்) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் பிராஜ் பக்த ஷ்ரெஸ்தாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 26 அன்று த்ரிசூலி ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, அந்த ஆற்றின் குறுக்கே உள்ள ஆறு நீர்மின் திட்டங்களுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகளுக்குள் குறைந்தபட்சம் 900 பேராவது சிக்கியிருக்கலாம் என அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் நம்புகின்றனர்.
மீட்கப்பட்டவர்களில் கபீர் மகர்ஜனால் கை, கால்களை அசைக்க இயலவில்லை என்றும், அதேநேரம் சஞ்சய் சாவின் காயங்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் எரிசக்தி அமைச்சரின் உதவியாளர் தெரிவித்தார். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக காத்மண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
இது குறித்து கபீரின் சகோதரர் அமீர் மகர்ஜன் கூறுகையில்,
“அதிகாரப்பூர்வமாக எனக்கு இன்னும் தகவல்கள் வரவில்லை, ஆனால் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.
எனது சகோதரர் மீட்கப்பட்டதைச் செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன். குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
