இந்தியாவில் நடைபெற்று வரும் உலக அழகிப் (மிஸ் வேர்ல்ட் 2025) போட்டியில் இருந்து 2024 மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வென்ற மில்லா மேகீ விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த போட்டியில் இருந்து விலகுவதாக கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், தி சன் நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்த உலக அழகி போட்டியின் சூழலால் ஏமாற்றம் அடைந்ததாக மேகீ தெரிவித்துள்ளார். மேலும் ‘ஒரு நோக்கத்திற்கு உதவும் அழகு’ (‘beauty with a purpose’) என்ற அவருடைய எதிர்பார்ப்புகளுடன் இந்த போட்டியின் சுற்றுச்சூழல் ஒத்துப்போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்த உலக அழகி போட்டி நடத்துவதற்காக நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுத்தர வயது ஆண்களுடன் பழக வேண்டும் என்று கூறியது விளிம்பு நிலைக்கு தள்ளியது,” என்று தி சன் நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இவ்விடயம் பெரும் பேசுபொருளாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
24 வயதான மில்லா மேகீ, மே 7ஆம் திகதி ஹைதராபாத்தை வந்தடைந்தார். மே 16ஆம் திகதி உலக அழகிப் போட்டியில் இருந்து விலகி தன்னுடைய தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், உலக அழகி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர், ஜூலியா மோர்லே அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் “இந்த மாதத்தின் துவக்கத்தில் தன்னுடைய அம்மா உடல் நலக்கோளாறால் அவதியுற்று வருவதாகக் கூறி போட்டியில் இருந்து விலக விரும்புகிறேன் என்று கோரிக்கை வைத்தார் மில்லா மேகீ.
அவரின் வேண்டுகோள்களுக்கு முன்னுரிமை அளித்து, அவரை அவருடைய நாட்டுக்கு அனுப்பி வைத்தோம். அவர் மற்றும் அவருடைய குடும்பத்தாரின் நலன் குறித்து நாங்கள் அக்கறை காட்டினோம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இங்கிலாந்து பத்திரிக்கைகள் தவறான, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான செய்திகள் வெளியிட்டு வருவது எங்களின் கவனத்திற்கு வந்தது. ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் அவர் எங்களுடன் தங்கியிருந்த நாட்களில் இருந்த யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறுபட்டவை” என்று கூறப்பட்டிருந்ததாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை, மிஸ் இங்கிலாந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சார்லேட் க்ராண்ட் தற்போது இங்கிலாந்து சார்பில் உலக அழகிப் (மிஸ் வேர்ல்ட் 2025) போட்டியில் பங்கேற்றுள்ளார்.