சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு (101), கடந்த 01ஆம் திகதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை காலமனாார். இதனிடையே, அவரின் விருப்பப்படி மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு அவரின் உடல் தானம் அளிக்கப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மறைந்த நல்லகண்ணு மறைவிற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், மனித நேய கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவர் நல்லகண்ணு. விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர். மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களின் விவரத்தை தொகுத்து நூலாக வெளியிட்டவர் நல்லகண்ணு என்பது குறிப்பிடத்தக்கது.

















