பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்தப் பின்னடைவுக்கு அமெரிக்காவே முழு முதற்காரணம் என ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்காசியாவில் போர் மூண்டது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், உலக நாடுகளின் பெரும் முயற்சியால் கடந்த வாரம் இடைக்காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை உயர்மட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதில் முக்கியப் பிரதிநிதிகளாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை இறுதியில் தோல்வியில் முடிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‘கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மிகத் தீவிரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஒப்பந்தம் எட்டப்படும் தறுவாயில், அமெரிக்கா முன்வைத்த புதிய நிபந்தனைகளே தோல்விக்குக் காரணம். நல்லெண்ணம் நல்லெண்ணத்தை உருவாக்கும், ஆனால் பகைமை பகைமையையே உருவாக்கும்.’ – என்று தெரிவித்துள்ளார்.
