சோமாலியக் கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
18,500 பீப்பாய் எரிபொருளை ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் 17 பேர் இருந்ததாகவும் ஊழியர் குழுவில் ஒரு இலங்கையர், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஓர் இந்தியர் மற்றும் மியான்மார் நாட்டு பிரஜை ஒருவரும் அடங்குகின்றனர்.
சோமாலிய அதிகாரிகள் அல்லது சோமாலியக் கடல் பரப்பில் கடற்கொள்ளை ஒழிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஐரோப்பிய கடற்படை இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது
