கனடாவின் வாஹன் நகரில் புதன்கிழமை மாலை நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ட்டின் குரோவ் மற்றும் லாங்ஸ்டாஃப் சாலைகளுக்கு அருகிலுள்ள கைசர் டிரைவ் பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஒரு வீட்டின் முன்பாக பல துப்பாக்கிக் காயங்களுடன் கிடந்த இரண்டு ஆண்களை மீட்டனர்.
எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், யோர்க் பிராந்திய பொலிஸ் அதிகாரி கெவின் நெப்ரிஜா இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டின் உரிமையாளர் எனவும் மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், ஆனால் அவர்கள் அண்டை வீட்டார் என்ற அடிப்படையில் மட்டுமே பழகியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, நீல நிற SUV ரக கார் ஒன்றில் மூன்று நபர்கள் தப்பியோடியதை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில், ஹண்டிங்டன் மற்றும் கிர்பி சாலைப் பகுதியில் ஒரு கார் தீப்பிடித்து எரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த கார், சந்தேகிக்கப்படும் நபர்கள் பயன்படுத்திய காராக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இது குறித்த தடயவியல் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
