வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை சுழிபுரத்தில் நடைபெற்றது.
வட்டுக்கோட்டை பிரகடனம் நடைபெற்ற யாழ்ப்பாணம் சுழிபுரம் வழக்கம்பரை அம்மன் ஆலய வளாகத்திலேயே பொன்விழா நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை க.ஜெகதாஸ், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், செல்வராசா கஜேந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பொன்விழா நிகழ்வில் வட்டுக்கோட்டை பிரகடனம் தவத்திரு வேலன் சுவாமிகளால் வாசிக்கப்பட்டது.
1976ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்டது. அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் தந்தை சா. ஜ. வே. செல்வநாயகத்தால் பிரகடனம் செய்யப்பட்டது. ‘இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சுதந்திரமான இறைமையுள்ள தனித் தமிழீழம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லை’, என்பதே அந்தப் பிரகடனத்தின் செய்தியாகும்.


