யாழ்ப்பாணம் – வலி. வடக்கில் காணி விடுவிப்பை வலியுறுத்தி வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு கறுப்பு கொடிகளை பறக்க விட்டு முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்களை பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனிடையே, வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஐந்தாவது வாரமாக இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தின் கொமாண்டோ பங்களா முன்பாக ஐந்தாவது தடவையாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 651 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கின் 249, 256, 248, 251, 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்தப் பகுதியை உள்ளடக்கிய பெரும்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் அந்தப் பகுதிகளிலிருந்து படையினர் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

