கடந்த மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது விதிமுறைகளை மீறி பொது வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர் என்று மூவர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்களின் படங்கள் மற்றும் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவின. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையிலேயே மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் புத்தூர் சந்தியிலிருந்து கொடிகாமம் ஊடாக கிளிநொச்சி நோக்கிப் பயணித்தனர் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் விடுத்த அறிக்கையில்,
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சதித்திட்டங்களின் அடிப்படையில் குற்றமிழைத்துள்ளனரா என்பதை நீதிமன்றத்தின் முன் சான்றாதாரங்களுடன் நிரூபிப்பதற்கான முறையான விசாரணைகள் நுணுக்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை பொலிஸார் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இனம், மதம் அல்லது தனிமனித தராதரம் பாராது அனைவருக்கும் சமமாகவே சட்டத்தை நிலைநாட்டும் என உறுதியளித்துள்ளதுடன், ஒரு விசாரணையின் இறுதி முடிவுகளை எட்டுவதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதால், இந்த இடைப்பட்ட காலத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை உடைக்க முயலும் சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் குறுகிய நோக்கங்களுக்குப் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
