நிலவில் நிரந்தரத் தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்கு றொபேர்டிக் லாண்டர்ஸ் (robotic landers), ஹொப்பிங் ட்ரோன்ஸ் (hopping drones) உள்ளிட்ட விண்வெளி வாகனங்களை அனுப்பி வைப்பதற்கு நாஸா திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் அமேசன் நிறுவுநர் ஜெப் பெசோஸின் ப்ளு ஒரிஜின் உள்ளிட்ட பல தனியார் விண்வெளி நிறுவனங்களும் இணையவுள்ளன.
2029ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவில் மனிதர்களை தரையிறக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே, 2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் சீனா வேகமாக முன்னேறி வருகிறது. இதன் ஓர் அங்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்சூ -23 என்ற விண்கலத்தை 5 வீரர்களுடன் சீனா ஏவியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நிலவின் தெற்குப் பகுதியில் அணு மற்றும் சூரிய ஆற்றலால் இயங்கும் நிரந்தர தளத்தை 2032இல் அமைக்க 2 ஆயிரம் கோடி டொலர் மதிப்பிலான இக்னியேஷன் மூன் பேஸ்’ திட்டத்தை அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது.
இந்த நிலவுத்தளம் மூலம் அறிவியல் ஆய்வுகளை இலகுபடுத்துவதுடன், அரிய வளங்களை அகழ்வதும் எதிர்கால செவ்வாய் நோக்கிய பயணங்களை எளிதாக்குவதும் சாத்தியம் என்று கூறப்படுகிறது. ஆனால், பல நிபுணர்கள் நாஸாவின் காலக்கெடு சாத்தியமற்றதாக இருக்கலாம் என்றும் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கக்கூடிய விண்கலத்தை உருவாக்குவதில் இன்னும் சவால்கள் இருக்கின்றன என்றும் கூறுகின்றனர்.
நாஸாவின் திட்ட அறிவிப்பு அரசியல் அழுத்தங்களையும் சமாளிக்க முயல்கிறது என்பதை குறிக்கிறது என்று கூறிய நிபுணர்கள். சீனாவின் இலக்கு நிறைவேறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எது எப்படி இருப்பினும் 2032ஆம் ஆண்டு நிலவில் குடியிருப்புகளை ஏற்படுத்துவதே நாஸாவின் இலக்கு. தென் துருவத்தில் உறைந்த நீர் இருப்பதாக நம்பப்படுகிறத. இதனால், குடிதண்ணீர், ஒட்சிசன் உற்பத்தி போன்ற தேவைகளுக்காக அந்தப் பகுதி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
