தெற்கு ஒன்ராறியோ பகுதி முழுவதும் 100 இற்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடிய இரண்டு வெவ்வேறு வாகனத் திருட்டு கும்பல்களைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உட்பட 9 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர் என நயகரா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2025 ஏப்ரல் மாதம் ‘லெக்ஸஸ் எஸ்யூவி’ ரக கார் ஒன்று திருடப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை முதன்முதலில் தொடங்கப்பட்டதாக நயகரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட சம்பவமாகத் தோன்றிய இது, பின்னர் தெற்கு ஒன்ராறியோ முழுவதும் இயங்கி வரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வாகனத் திருட்டு கும்பலின் பின்னணியை நோக்கிய சிக்கலான விசாரணையாக மாறியது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் முதல், நயகரா பிராந்தியத்திற்குள் புதிய ரக லெக்ஸஸ் மற்றும் டொயோட்டா வாகனங்கள் திருடப்பட்ட மற்றும் திருட முயன்ற 50 இற்கு மேற்பட்ட சம்பவங்களை நயகரா பொலிஸார் விசாரித்துள்ளனர்.
இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு 20 மில்லியன் டொலருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ‘புராஜெக்ட் ஜாக் லிங்க்ஸ்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டது. இதன் மூலம் தெற்கு ஒன்டாரியோ முழுவதும் இயங்கி வரும் பல தனித்துவமான மற்றும் சுதந்திரமான குற்றவியல் வலையமைப்பினை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
