பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியதில் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸின் பிரபல உதைபந்தாட்ட கழகமான பாரிஸ் சென் ஜெர்மைன் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அப்போது, பாரிஸ் தலைநகரில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில், அங்கு வன்முறை பரவியது. இதில், வாகனங்கள் சில தீக்கிரையாக்கப்பட்டன. கடைகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம்இ வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார்மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து 416 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வன்முறையின்போது 6 வாகனங்கள், ஒரு பேருந்து மற்றும் இரு கடைகள் சேதமடைந்தன என்று கூறப்படுகிறது.
மோதல்களின்போது 7 பொலிஸார் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய தினம் பாரிஸ் சென் ஜெர்மைன் வீரர்களுக்கான வெற்றி ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பாரிஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
