மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தற்காலிக நிவாரணங்கள் செப்ரெம்பர் மாத இறுதிக்குள் நிறுத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துக்கு (ஐ.எம்.எவ்.) உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த நிவாரணங்களுக்கு செலவிடும் நிதியை ஆயிரம் கோடி ரூபாய்க்குள் கட்டுப்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் உடனடி உதவிகளில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், இலங்கைக்கான ஐ.எம்.எவ்வின் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி திட்டத்தின் 5 மற்றும் 6வது மதிப்பாய்வுகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் சுமார் 69 கோடியே 50 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி விரைவில் விடுவிக்கப்படவுள்ளது.
இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த ஐ.எம்.எவ். உதவி 240 கோடி டொலராக உயர்ந்துள்ளது.
அண்மைய இயற்கை அனர்த்தங்களும் பொருளாதார அழுத்தங்களும் நாட்டின் வளர்ச்சி வீதத்தை குறைக்கும் எனவும் ஐ.எம்.எவ். மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சூழ்நிலையில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
