இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை நேற்று – சனிக்கிழமை புழுதிப் புயல் வீசியது. பிகானேர் நகரத்தில் வீசிய இந்தப் புழுதிப் புயலால் நகரம் முழுவதும் பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
மஞ்சள் நிற புழுதிக் காற்று நகரத்தை நோக்கி வேகமாக முன்னேறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. புழுதிப் புயல் காரணமாக, முக்கிய வீதிகளில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாதளவுக்கு காட்சித் தெளிவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் போக்குவரத்து முற்றாக முடங்கியது. மக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். கடைக்காரர்கள் கடைகளை மூடிக்கொண்டு பாதுகாப்பாக வெளியேறியதால் வீதிகளில் குழப்பமான சூழல் நிலவியது. பல இடங்களில் பலத்த காற்றால் மரக்கிளைகள் முறிந்தன. இதனால் சில பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டது.
கோடை வெப்பத்தில் நிலம் வறண்டு தூசியாக மாறுவதும் தாழ் காற்றழுத்த மாற்றங்களும் பாலை நிலப் பகுதிகளில் இருந்து வரும் சூடான காற்றும் இணைவதால் புழுதிப் புயல்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
