மலேசியாவின் மந்தின், ஜாலான் கம்போங் கேபோக் சாலையில் கடக்க முயன்ற 43 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவர், மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 6.40 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்த அந்த வெளிநாட்டு பிரஜை சிகிச்சைக்காக சிரம்பான், துங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Red Zone) அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பாகிஸ்தான் பிரஜை, இன்று காலை சுமார் 10.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நீலாய் மாவட்ட காவல்துறை பொறுப்பதிகாரி ஜோஹாரி யஹ்யா உறுதிப்படுத்தியுள்ளார்.
23 வயதுடைய இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் முன்பாக அந்தப் பாகிஸ்தான் பிரஜை திடீரென சாலையைக் கடக்க முயன்றுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிளோட்டியால் உடனடியாக பிரேக் பிடிக்க முடியாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அந்த 23 வயது இளைஞருக்கும் தலையிலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
