தையிட்டிப் பாதை திறப்பதை தடுக்க முடியாது எனத் தீர்ப்பு

“யாழ். தையிட்டி விகாரை பிக்குவினால் மூடப்பட்டுள்ள பொதுப் பாதையான பவானி வீதியை வலிகாமம் வடக்கு பிரதேச சபை திறந்து விடும் நடவடிக்கையைப் பொது அமைதிக்கு பங்கம் விளையும் என்ற பெயரில் குற்றவியல் நடவடிக்கைச் சட்டக் கோவையின் 81 ஆம் பிரிவின் கீழ் தடுக்க முடியாது. அந்த விடயத்தில் பிரதேச சபையின் சட்ட ரீதியான நடவடிக்கையை இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தடுப்பதற்கு இடமில்லை.” – என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தையொட்டி வலிகாமம் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனுக்கும் சபையின் செயலாளருக்கும் எதிராக பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து இருக்கின்றது.

பிரதேச சபைக்குச் சொந்தமான பொது வீதியான பவானி வீதியை விகாரையின் பிக்கு ஆக்கிரமித்து மூடி வைத்திருக்கின்றார் எனத் தெரிவித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அந்த வீதியைத் திறப்பதற்கு பிரதேச சபை உரிய ஏற்பாடுகளை செய்த போது, அதற்கு எதிராக சம்பந்தப்பட்ட பிக்கு பலாலி பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

அதனையடுத்து, பிரதேச சபையின் தவிசாளருக்கும் செயலாளருக்கும் எதிராகப்  பலாலி பொலிஸார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 81ஆவது பிரிவின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றனர் எனத் தெரிவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்குத் தவணையின் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி பிரதேச சபை தவிசாளருக்கும் செயலாளருக்கும் சார்பாகச் சமர்ப்பணங்களைச் செய்திருந்தார்.

”மேற்படி 81 ஆவது பிரிவின் கீழ் வழக்கு இரண்டு தரப்புகளுக்கு இடையிலான சர்ச்சையை ஒட்டித் தாக்கல் செய்யப்படலாம். ஆனால் பிக்குவை ஒரு தரப்பாக அழைக்காமல் தவிர்த்த பொலிஸார் மற்றொரு தரப்பாக பிரதேச சபை நிர்வாகம் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். இது அடிப்படையில் பிழையானது. 81 ஆம் பிரிவின் கீழ் இது சாத்தியமேற்றது” – என்று சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

”அது மாத்திரமில்லாமல், பிரதேச சபையின் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸார் அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றனர் என்ற பெயரில், தான் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தரப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றமை முழுத் தவறான நடவடிக்கை. சட்ட ரீதியான அரசுப் பணிகளுக்கு எதிராக இந்த 81ஆவது பிரிவை பயன்படுத்த முடியாது. அந்த நடவடிக்கை தவறாயின் அதற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு ஏதும் சமர்ப்பிக்கலாமே தவிர, குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவையின் 81 ஆவது பிரிவின் கீழ் அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற குற்றத்தைச் சுமத்த முடியாது” – என்று சுமந்திரன் நீதிமன்றத்தில் நீண்ட வாதம் ஒன்றை முன்வைத்திருந்தார்.

அந்த வாதத்தையொட்டிய தீர்ப்பை இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் வழங்கியது.

சுமந்திரனின் சமர்ப்பணத்தை ஏற்று, மேற்படி பிரதேச சபையின் தவிசாளருக்கும் செயலாளருக்கும் எதிராக வழக்கைத் தொடர முடியாது என்று குறிப்பிட்டு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் வலிகாமம் பிரதேச சபையின் உத்தியோகபூர்வ சட்டத்தரணி சத்தியநாதன் கஜேந்திரன் பிரசன்னமாகியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி மேற்படி வீதியை பிரதேச சபை திறப்பதை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கை என்ற பெயரில் பொலிஸார் இனித் தடுக்க முடியாது என்று சட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles