ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் கப்பல்கள் மீது அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
சனிக்கிழமை மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற அமெரிக்காவின் தொலைவிலிருந்து இயக்கப்படும் படகு மீது ஈரான் கடற்படை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சு போர்க்குற்றம் எனக் கண்டித்துள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
இதனிடையே, ஈரானின் நதான்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள பிக்அக்ஸ் நிலத்தடி அணுசக்தி வளாகம் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடைந்து வருவதால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலைகள் தொடர்பிலும் கவலை அதிகரித்துள்ளது.
