ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் சுமார் 20 இலட்சம் அமெரிக்க டொலரை நிதி மோசடி செய்ததாார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்ரெம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினமே அவரது பிணை கோரிக்கை தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் முன்வைத்த சமர்ப்பணங்களைக் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தின் மீதான கட்டளை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் பின்னணியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
