Colombo (News 1st) நாட்டில் உள்ள தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலய அலுவலகங்கள் சிலவற்றுக்கு சிவில் சமூக ஒன்றியம் 8 விடயங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை இன்று கையளித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாமலாக்கி, புதிய அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வருவதை தடுக்குமாறு கோரி இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு சென்ற குறித்த தரப்பினர், தூதரக அலுவலக அதிகாரியிடம் தமது அறிக்கையைக் கையளித்தனர்.
பின்னர் அவர்கள் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று பிரதி உயர்ஸ்தானிகரிடம் அறிக்கையைக் கையளித்ததுடன், கொழும்பிலுள்ள பாலஸ்தீன், மாலைத்தீவு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதரக அலுவலகங்களிலும் அறிக்கையை வழங்கினர்.
ரஷ்ய தூதரக அலுவலகத்திற்கும் சிவில் சமூக ஒன்றியம் 8 விடயங்கள் அடங்கிய அறிக்கையைக் கையளித்துள்ளது.
நெதர்லாந்து உயர்ஸ்தானிகராலயத்திற்கும் சென்று அறிக்கை வழங்கப்பட்டதுடன், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக சென்று அமைதியான முறையில் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர்.