Colombo (News 1st) புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களின் ஒன்றுகூடும், கருத்து வௌியிடும் உரிமைகளுக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
1979 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் இந்த சட்டமூலமானது, உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சம்மேளனம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளனத்துடன் இணைந்து இலங்கையில் செயற்படும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியனவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு கூட்டாக எதிர்ப்பு வௌியிட்டுள்ளன.
உத்தேச சட்டமூலத்தை மீள பெறுமாறும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்கள், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள், அமைப்புகள் சட்டரீதியான துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.