Colombo (News 1st) சுமார் 30 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இன்று(16) இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தூர பயண ரயில் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாளை(17) அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட தூர பயண சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடமைகளுக்கு சமூகமளித்துள்ள சாரதிகளை சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கு பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் நாளைய(17) தினத்திலும் சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக குறித்த அதிகாரி கூறினார்.
இதேவேளை, புத்தாண்டில் சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு வருகை தரவுள்ள பொதுமக்களுக்காக நாளை(17) முதல் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.