Colombo (News 1st) மஹவெல மற்றும் கல்கிரியாகம பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மஹவெல – ரஜகம்மன சுதுகங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதமுல்ல கிஹிலுவ பகுதியை சேர்ந்த 22 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, கல்கிரியாகம உஸ்ஸான பாலத்திற்கு அருகில் ஹெவென்வெல்ல ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேவஹூவ பகுதியை சேர்ந்த 37 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அபாயம் மிக்க பகுதிகளில் நீராடச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
பொசொன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில் உயிர் காப்புப் பிரிவின் 355 அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்