Greece: புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகு கிரேக்க கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலியை நோக்கி சென்று கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு, கிரேக்கம் அருகே நேற்று (14) கவிழ்ந்துள்ளது.
அளவிற்கு அதிகமானவர்களுடன் பயணித்ததாலும் கடும் காற்றினாலும் படகு கவிழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது.
கிரேக்கத்தின் தெற்கில் அமைந்துள்ள பெரோபொனீஸ் தீபகற்பத்திற்கு தென்மேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவில் சா்வதேச கடல் எல்லையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அது மிகவும் ஆழமான கடல் பகுதி என்பதால், அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து இதுவரை 79 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமற்போயுள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோர விரும்புவோரை சட்டவிரோதமாக ஏற்றிக்கொண்டு குறித்த படகு கிழக்கு லிபியாவின் டோப்ரக் நகரிலிருந்து புறப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.