Uruguay: உருகுவேயில் பல மாதங்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய தண்ணீர் நெருக்கடியைத் தணிக்க “சட்ட செயல்முறைகளை விரைவாகவும் எளிதாகவும்” செயற்படுத்தவே அவசரகால நிலையை அறிவித்ததாக உருகுவே ஜனாதிபதி Luis Lacalle Pou குறிப்பிட்டுள்ளார்.
சான் ஜோஸ் ஆற்றிலிருந்து (San Jose River) குடிநீர் கொண்டு வரும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் அப்பணி 30 நாட்களில் சாத்தியப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
தலைநகர் Montevideo-இல் உள்ள 21,000 குடும்பங்களுக்கு இலவசமாக 2 லிட்டர் தண்ணீரை அரசு வழங்கும் என்றும், குடிநீர் போத்தல்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் ஊருகுவே அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஒரு சில வாரங்களுக்கு நாட்டில் மழைக்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தாலும், தற்போதைய கடுமையான தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக உருகுவேயில் கடந்த 7 மாதங்களாக மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் 60 சதவீத நீர் ஆதாரமாக விளங்கிய அணைக்கட்டுகளிலும் தண்ணீர் வறண்டுபோனதால், அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் அங்கு போத்தல் தண்ணீர் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதுடன், தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விலை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.