சாரதிகள மற்றும் நடத்துநர்களுக்கு நிலவும் வெற்றிடங்களுக்கு பொருத்தமானோரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.
520 சாரதிகளுக்கும் 170 நடத்துநர்களுக்கும் வெற்றிடம் நிலவுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் பற்றாக்குறையினால் பஸ் சேவையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வினூடாக சாரதிகள், நடத்துநர்களின் வெற்றிடங்களுக்கு உரியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கூறியுள்ளார்.
அவர்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
800 சாரதிகளும் 290 நடத்துநர்களும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 400 பஸ்களில் கடந்த மார்ச் மாதம் முதல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் கூறினார்.
இதுவரை 160 பஸ்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியிலிருந்து சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.