Colombo (News 1st) புனித ஹஜ் கடமைக்காக சென்ற இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஹஜ்ஜாஜிகள் இன்று அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடுவதே ஹஜ்ஜின் முக்கியமான அம்சமாகும்.
உலகின் நாலா பகுதிகளிலும் இருந்தும் சுமார் 2.5 மில்லியன் ஹஜ்ஜாஜிகள் இம்முறை புனித ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதி கடமையாகவே ஹஜ் கடமை திகழ்கின்றது.
பொருளாதார ரீதியாக வசதிபடைத்த ஒருவர் தேக ஆரோக்கியத்துடன் இருந்தால், அவர் கட்டாயமாக புனித கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.
அரஃபா மைதானத்தில் இன்று கூடிய ஹஜ்ஜாஜிகள் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
COVID பெருந்தொற்றின் காரணமாக கடந்த சில வருடங்களாக பெருந்திரளான மக்களுக்கு ஹஜ் கடமைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாத நிலையிலேயே இம்முறை இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று அரஃபா மைதானத்தில் இருந்து முஸ்தலிபாவிற்குச் செல்லும் ஹாஜிகள் அங்கு தரிப்பர். அதன் பின்னர் மினாவிற்கு சென்று ஜமராத்களுக்கு கல் எறியவுள்ளனர்.
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாகவே இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இறுதியானதாக ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.
இற்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவி மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபியை இறை கட்டளையின் பிரகாரம் பலியிடத் துணிந்த வரலாறு மற்றும் அந்த குடும்பத்தின் தியாகம் இதன்போது நினைவுகூரப்படுகின்றது.
You must be logged in to post a comment.