Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த 15 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று முன்தினம்(09) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களையும் அவர்களின் 2 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வௌியுறவுத் துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்திய – இலங்கை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு மக்கள் வாழ்வதாக தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளினூடாக அந்த குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் மீள ஒப்படைக்கவும் இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா – இலங்கை இடையில் சுமூகமான நட்புறவு பேணப்படும் நிலையில், தூதரக நடவடிக்கைகளினூடாக மீனவர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க சுமூகமான தீர்வினை பெற முடியும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வௌியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது தொடர்பில் முன்னுரிமை அளித்து கலந்துரையாடி பிரச்சினைக்கான தீர்வினை பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.