France: பிரான்ஸின் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
இதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸின் பிரதமர் Élisabeth Borne விமான நிலையத்திற்கு சென்று மோடியை வரவேற்றார்.
இதனையடுத்து, பிரான்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.
இதன்போது, அங்கு இருந்தவர்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோஷமிட்டுள்ளனர். இதனால், மகிழ்ச்சியடைந்த நரேந்திர மோடி, இந்தியாவில் கேட்பது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.
G20 நாடுகளில் இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளமை இந்தியாவிற்குக் கிடைத்த பெருமை எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
பின்னர் தொடர்ச்சியாக உரையாற்றிய மோடி, உலகின் மூத்த மொழி தமிழ் எனவும் இந்தியர்களாக அதில் பெருமிதம் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று மேடையில் உரையாற்றிய பிரதமர் மோடி,
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
என்ற திருக்குறளைக் கூறி, பின்னர் பிரான்ஸில் மாபெரும் திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Grand Cross of The Legion of Honour எனும் உயரிய விருது அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானால் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இந்த விருதை, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் ஜெர்மனியின் முன்னாள் அதிபர் Angela Merkel உள்ளிட்ட தலைவர்கள் இந்த விருதினை பெற்றுள்ளனர்.