Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லையென சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான C.V.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
ஜெர்மன் பத்திரிகையாளருக்கு ஜனாதிபதி அளித்த நேர்காணல் மூலம் வௌிநாடுகளில் பெற்றிருந்த வெற்றிகள் அனைத்தும் களங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஊடாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கடும்போக்கு சிங்களவர்களின் வாக்குகளை உறுதிப்படுத்தியபோதிலும் சிங்களவர்கள் அல்லாதவர்களின் வாக்குளை இழக்கலாம் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லாவிடில், தங்களிடம் அதனை கூறுமாறும் குறித்த கடிதத்தில் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழர்கள் பொதுவான தமிழ் வேட்பாளரை நியமிப்பது பற்றி சிந்திப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ள சி.வி.விக்கினேஸ்வரன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக்கூடிய ஆலோசனைக் குழு இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.