Colombo (News 1st) இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ரத்நாயக்கவின் உடல் இன்று (28) முற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவரது உடல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அவரது உடலை பொறுப்பேற்பதற்காக அவரது உறவினர்களும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் சிலரும் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இஸ்ரேலின் மீது ஹமாஸ் கிளர்ச்சியாளர்களினால் கடந்த 07 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் அனுலா ரத்நாயக்க காணாமற்போயிருந்தார்.
பின்னர் மோதல்களின் போது அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
அனுலா ரத்நாயக்க, இஸ்ரேலில் 10 வருடங்களாக பணிபுரிந்திருந்தார்.
களனி – ஈரியவெட்டிய பகுதியை சேர்ந்த 49 வயதான அவர், இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.