எதிர்வரும் 18 ஆம் திகதிக்கும் 20 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், காலநிலை அவதானியுமான நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்தத் தாழமுக்கமானது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மிக அண்மையாக தோன்றும் வாய்ப்புள்ளதனை மாதிரிகள் காட்டுகின்றன. எனினும் இதன் உறுதித்தன்மையை எதிர்வரும் 15 ஆம் திகதி அன்றே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு ஒரு தாழமுக்கம் உருவாகினால் வடக்கு மாகாணம் முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதுடன் யாழ். நகரம் உட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது பெய்துவரும் மழை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடரும் என்றும் நா.பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.