Colombo (News 1st) காலி முகத்திடல் பகுதியை அண்மித்த பல வீதிகள் இன்று (03) பிற்பகல் 2 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
76 ஆவது சுதந்திர தினம் நாளை (04) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதுவரை குறித்த வீதிகள் மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுதந்திர தின விழாவையொட்டி போக்குவரத்து கடமைகளில் 5000 -இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, நாளை காலை 05 மணி முதல் காலை 09 மணி வரை கரையோர ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட மாட்டாதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.