Colombo (News 1st) உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று(15) முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்காக சுமார் 30 பேர் பதிவு செய்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதிநிலை அறிக்கையின் அடிப்படையிலான பகுப்பாய்விற்கமைய, தற்போதைய மின்சார கட்டணத்தை 20 முதல் 25 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை மின்சார சபை ஈட்டிய இலாபம் மற்றும் அந்த வருடத்தின் இறுதியில் இருந்த நீர் கொள்ளளவு ஆகியவற்றை கருத்திற்கொண்டு மின் கட்டண திருத்த யோசனையை முன்வைக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதற்கமைய, 3.34 வீத கட்டண குறைப்பிற்கான யோசனையை ஜனவரி 16 ஆம் திகதி மின்சார சபை முன்வைத்தது.
இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியது.
ஆணைக்குழுவின் அனுமதியின்றி 2024 ஆம் ஆண்டில் 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவு உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மின் உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் இல்லாத மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை பெற இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.