தலைநகர் டெல்லியில் கேஷப்பூர் ஊரில் 50 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது குழந்தையாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், இறந்த நிலையில் இளம் ஆணின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தலைநகரில் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கேஷப்பூர் பகுதியில் இன்று அதிகாலை ஆழ்துளை கிணற்றுக்குள் ஒருவர் தவிரி விழுந்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த ஆழ்துளை கிணறு கிட்டத்தட்ட 40 முதல் 50 அடி ஆழம் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
டெல்லியின் ஜல் போர்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருக்கக்கூடிய இந்த 40 முதல் 50 அடியிலான ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் முன்னதாக குழந்தை தவறி விழுந்திருப்பதாக தகவல் தெரிந்ததும் டெல்லி தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், குழந்தை விழுந்து இருக்கக்கூடிய ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பள்ளத்தை தோண்டி, அதன் மூலம் மீட்பு பணியை தொடரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
களப்பணியாளர்கள் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினார்கள். தீவிரமாக தொடங்கப்பட்ட இந்த மீட்புப்பணி சுமார் 3 மணியளவில் முடிந்துள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்திருப்பது குழந்தை தானா? என்கிற கோணத்திலும் இந்த விசாரணை நடத்தப்பட்டது. அந்த வகையில் சுமார் 3 மணியளவில் இளம் ஆணின் உடல் இந்த 50 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மீட்கப்பட்ட இந்த ஆண் சடலம் குறித்த விசாரணையை தற்போது தீவிரமாக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றுக்குள் குழந்தை விழுந்ததாகவே முதலில் கூறப்பட்ட நிலையில், இளம் ஆணின் சடலம் மீட்கப்பட்டது இந்த விவகாரத்தில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்திருக்கிறது.