காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்கடிதுறை, ஆரையம்பதி பகுதியில் குழந்தை நீர் தடாகத்தில் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
மாவிலங்கடிதுறையைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை திங்கட்கிழமை (08) அன்று தனது சகோதார்களுடன் தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அவரது தாயார் வீட்டினுள் சமையல் வேலையில் இருந்ததாகவும் பின்னர் சிறிது நேரத்தில் தாயார் வெளியில் வந்து குழந்தையை தேடிய போது குழந்தையை காணவில்லை.
இந்நிலையில் வீட்டு முற்றத்தில் இருந்த நீர் வாளியிலுள் (தடாகம்) குழந்தை வீழ்ந்து கிடந்த நிலையில், உடன் குழந்தையை தாயார், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானின் பணிப்புக்கமைவாக, காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன், ஆரையம்பதி வைத்தியசாலைக்கு சென்று பிரேதத்தை பார்வையிட்ட பின்னர். பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு அறிவித்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று செவ்வாய்கிழமை (09) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.