என்னது.. 3 கிலோ தங்கம் வெறும் 15 லட்சம் தானா என்று வாயை பிளந்த வெங்காய வியாபாரி ராமஜெயம், உடனே அவரிடம் பணத்தை கொடுத்து தங்க நகைகளை வாங்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த வெங்காய வியாபாரி ஒருவர் தனது பேராசையால் லட்சக்கணக்கிலான பணத்தை இழந்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் ராமஜெயம். இவர் கோயம்பேட்டில் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ராகுல் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். தன்னை மிகப்பெரிய பணக்காரர் என்பது போல ராமஜெயத்திடம் ராகுல் காட்டிக் கொண்டுள்ளார். மேலும், தனக்கு இந்தியா முழுவதும் நிறைய சொத்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ராமஜெயமும், ராகுலித்தில் நல்லபடியாக நட்பு பாராட்டி வந்துள்ளார்.
இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு ராமஜெயத்தை சந்தித்த ராகுல், மைசூர் அரண்மனை அருகே உள்ள தங்கள் பூர்வீக வீட்டில் 3 கிலோ தங்க நகைகளை காட்டியுள்ளார். மேலும், அதில் உள்ள சிறிய நகையை ராமஜெயத்திடம் கொடுத்த ராகுல், இதை யாரிடமாவது விற்று தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, ராமஜெயமும் ஒரு நகைக்கடைக்கு சென்று அந்த நகையை விற்று கொடுத்துள்ளார். இதனால் அவருக்கு அந்த 3 கிலோ தங்க நகைகளையும் வாங்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.
இதையடுத்து, ராகுலை தொடர்புகொண்ட ராமஜெயம், இந்த 3 கிலோ தங்க நகைகளை வேறு யாரிடமோ விற்பதற்கு பதிலாக தன்னிடமே விற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு சம்மதித்த ராகுல், “எனது நண்பராக போய்விட்டீர்கள்.. நானும் இந்த தங்கத்தை நம்பி கிடையாது. சரி.. 15 லட்சம் தாருங்கள்” எனக் கேட்டுள்ளார். என்னது.. 3 கிலோ தங்கம் வெறும் 15 லட்சம் தானா என்று வாயை பிளந்த வெங்காய வியாபாரி ராமஜெயம், உடனே அவரிடம் பணத்தை கொடுத்து தங்க நகைகளை வாங்கியுள்ளார்.
பின்னர் சில நாட்கள் அந்த நகைகளை தனது வீட்டில் வைத்திருந்த ராமஜெயம், அதில் ஒரு நகையை மட்டும் எடுத்து நகைக் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது அதை பரிசோதிக்கையில், அது போலி நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமஜெயம் தன்னிடம் உள்ள 3 கிலோ நகைகளை கொண்டு சென்று பரிசோதித்த போதும், அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராமஜெயம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராகுலை கைது செய்தனர். ஆனால், ராகுலோ 15 லட்சத்தை செலவு செய்துவிட்டதாக அசால்ட்டாக கூறினார். இதையடுத்து போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.