ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லக்னோவில் இன்று(19) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸும் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கல்கத்தா, மும்பைக்கு எதிராக) 2 தோல்வி (டெல்லி, ஹைதராபாத்துக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3ஆவது இடத்திலுள்ளது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 206 ஓட்டங்கள் குவித்த சென்னை அணி, 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), 3 தோல்வி (ராஜஸ்தான், டில்லி, கல்கத்தாவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக ஆடிய டில்லி, கல்கத்தாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவிய லக்னோ வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியிலுள்ளது.
சென்னை – லக்னோ அணிகள் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தலா ஒன்றில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.