மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி முன்னாள் நடன ஆசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி இயங்கி வருகிறது. மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழே இந்த கல்லூரி செயல்படுகிறது. இந்த சூழலில், கடந்த ஆண்டு கலாஷேத்ரா கல்லூரியில் நடன ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி பல மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய அடையாறு அனைத்து மகளிர் போலீஸார், அந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள், தற்போது முன்னாள் நடன ஆசிரியரை திருவானிமியூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவரது பெயர் ஸ்ரீஜித். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடன பேராசிரியராக ஸ்ரீஜித் இருந்த போது, மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸாருக்கு புகார் வந்தது.
கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி ஒருவர் தான் இந்த புகாரை அளித்தார். இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்னை காவல் ஆணையரகம் உத்தரவிட்டது.
இதையடுத்து இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் ஸ்ரீஜித், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் ஸ்ரீஜித்தை கைது செய்தனர்.