Colombo (News 1st) அஸ்வெசும தொடர்பில் கிடைக்கும் மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் இந்த குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
இந்த குழுவின் ஊடாக தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான முறைமையை தயாரிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்களுக்கு, அதனை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும தொடர்பில் மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, “அஸ்வெசும” சமூக நலன்புரி திட்டத்தின் பயனாளர்கள் தொடர்பான ஆட்சேபனைகளையும் எதிர்ப்புகளையும் முன்வைப்பதற்காக நாளை (28) முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் விசேட கருமபீடத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
TV1 தொலைக்காட்சியில் இன்று காலை ஔிபரப்பான ‘நெகிடிமு ஶ்ரீ லங்கா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த, சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி இதனை தெரிவித்தார்.
அஸ்வெசும திட்டத்திற்கான பயனாளர்கள் தொடர்பில் தற்போது வௌியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல் இறுதியானது அல்லவெனவும் ஜூலை 10 ஆம் திகதிக்கு பின்னரே இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
அத்துடன், பொதுமக்களால் முன்வைக்கப்படும் ஆட்சேபனைகளை கவனத்திற்கொண்டு, அஸ்வெசும திட்டத்தின் பயனாளர்கள் குறித்த இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படுமென சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.
சமூக நலன்புரி நன்மைகள் சபைக்கு கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,30,000-இற்கும் அதிகமான ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படாத பெரும்பாலான சமுர்த்தி பயனாளிகள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.