Colombo (News 1st) வட மாகாண மீன்பிடித் தொழிலுக்கென பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன்மூலம் மீன்பிடித் தொழில் தொடர்பான முதலீடுகளை கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனூடாக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமன்றி நுகர்வோருக்கும் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் இடைத்தரகர்கள் குழுவொன்று முறையற்ற வகையில் இலாபம் ஈட்டும் மீன்பிடி மாஃபியாவை முடிவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் இவ்வருட உலக மீனவர் தினத்துடன் இணைந்ததாக நவம்பர் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வட மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தி வடக்கில் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
நடமாடும் சேவை, மீன்பிடி அடையாள அட்டை வழங்கல், மீன்பிடிப் படகுகளை பதிவு செய்தல், மீன்பிடி சமிக்ஞைகளின் தொடர்பாடல் பிரச்சினைகளை தீர்த்தல் உள்ளிட்ட கடற்றொழில் அமைச்சுடன் தொடர்புள்ள அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனைத்து சேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு தீர்வுகள் வழங்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நாரா நிறுவனத்தின் பரிசோதனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இரணைமடு நீர்த்தேக்கம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஏரிகளில் மீன் குஞ்சுகள் விடப்படுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுமார் 54 மில்லியன் மீன் குஞ்சுகள் நாடு முழுவதும் உள்ள நன்னீர் தேக்கங்களில் விடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சீன அரசின் உதவியுடன் ஒருநாள் மீன்பிடிப் படகுகளுக்கு மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் திட்டம் இரண்டாவது முறையாக செயற்படுத்தப்படுவதாகவும் ஒரு மீனவருக்கு 153 லீட்டர் மண்ணெண்ணெய் வீதம் 28000 மீனவர்களுக்கு 42 இலட்சத்து 50 ஆயிரம் லீட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுமெனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.