Colombo (News 1st) இரவு நேர பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை கூறியுள்ளார்.
இரவுப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் நாட்டின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும் அரச வருமானத்தை அதிகரிப்பது அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, உணவகங்கள் திறக்கப்படும் நேரத்தை மாற்ற வேண்டுமெனவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான வகையில், ஒரு நெகிழ்வான கொள்கைக்கு செல்ல வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.