தமிழ் சினிமா ரசிகர்களால் சின்ன கலைவாணர் என கொண்டாடப்பட்ட கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினியின் திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் விவேக். கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் இன்றும் தனது நகைச்சுவை காட்சிகளால் மக்களை சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார். அத்துடன் என்றென்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காமல் நிலைத்திருப்பார். இந்நிலையில் நடிகர் விவேக் மகளுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
உலகெங்கும் சினிமாவை பிடிக்காதவர்கள் கூட படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை ரசிக்காமல் இருந்ததில்லை. அந்தளவிற்கு சினிமாவில் வரும் காமெடி சீன்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புண்டு. அப்படி மக்களை சிரிக்க வைக்கும் கலைஞர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் உண்டு. அந்த வகையில் தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணராக கொண்டாடப்பட்டவர் விவேக்.
இவரது நகைச்சுவை காட்சிகள் பெரும்பாலும் சிரிப்பதற்கு மட்டுமானதாக இருக்காது. மாறாக மக்களை சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். குறிப்பாக மூட நம்பிக்கை, தீண்டாமை போன்ற பலவற்றிற்கு எதிராக தனது நகைச்சுவை காட்சிகளில் பிரச்சாரம் செய்திருப்பார். இதனாலே இவரை சின்ன கலைவாணர் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் விவேக். அப்துல் கலாமை தனது தீவிர வழிக்காட்டியாக கொண்ட இவர், பல லட்சம் மரங்களை நட்டு வைத்தார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் விவேக். அவரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
மறைந்த நடிகர் விவேக்கிற்கு தேஜஸ்வினி, அமிர்தா என இரண்டு மகள்களும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று தேஜஸ்வினியின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களது வீட்டில் பரத் என்பவருடன் தேஜஸ்வினியின் திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் ஹைலைட்டாக தந்தையின் கனவுப்படி தேஜஸ்வியும், பரத்தும் இணைந்து இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகள் நட்டு வைத்துள்ளனர். அத்துடன் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர். இது தொடர்பான போட்டோஸ் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வர்ற, ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.