திருமண மேடையில் மணமகளின் முன்னாள் காதலன் மணமகனை அனைவர் முன்னிலையிலும் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜா துபே என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பில்வாராவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வீடியோவில், திருமண வரவேற்பு நடைபெறும் இடத்திற்கு வந்த வாலிபர் மணமக்களுக்கு பரிசு வழங்க மேடை ஏறுகிறார். அப்போது அவர் மணமகளுக்கு பரிசை வழங்கி புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். இதையடுத்து மேடையில் இருந்து கீழே இறங்குவதற்கு முன் மணமகனுக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்லும் வாலிபர் திடீரென மணமகன் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்துகிறார்.
இதனால் அதிர்ச்சி அடையும் மணமகள் மற்றும் சுற்றி இருந்தவர்கள் வாலிபரை தடுக்க முயன்றனர். இருப்பினும் வாலிபர், மணமகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு அங்கே இருந்து தப்பியோடி விடுகிறார். இதில் மணமகன் பலத்த காயம் அடைகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக மணமகளின் சகோதரர் போலீசில் புகார் அளிக்கிறார். இதன்பின் தான் போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது மணமகன் மீது தாக்குதல் நடத்தியது மணமகளின் முன்னாள் காதலன் என்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் வசித்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் மணமகள். அப்போது தான் அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் லால் பார்தி என்ற வாலிபருடன் மணமகளுக்கு பழக்கம் ஏற்படுகிறது. இது நாளடைவில் காதலாக மாறுகிறது. சில நாட்களுக்கு பிறகு இவர்களின் காதலில் ஏற்பட்ட கசப்பால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்தே மணமகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
மணமகன் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் காதலரான சங்கர் லால் பார்தி மற்றும் அவருக்கு உதவியதாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.