கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியரான அமிஷா அகர்வால் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் அடிப்பட்ட கால்கள் மற்றும் சிகிச்சைக்கு பிறகான கால்கள் என புகைப்படங்களை பகிர்ந்து “இனி ஒருபோதும் ரேபிடோ பைக்கை எடுக்க வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் சம்பவம் குறித்து கூறியுள்ளதாவது:-
“வெள்ளிக்கிழமை இரவு ரேபிடோ பைக்கை முன்பதிவு செய்தேன். ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக ஓட்டினார். கடுபீசனஹள்ளி அவுட்டர் ரிங் ரோட்டில், இன்டிகேட்டர் பயன்படுத்தாமல் திடீரென சர்வீஸ் லேனுக்கு மாறினார். இதனால் பின்னால் வந்த கார் கட்டுப்பாடு இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சாலையில் வீழ்ந்தோம்.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால், தவறு செய்த பைக் ரைடர் எந்த உதவியும் செய்யவில்லை. ரைடர் பயணத்தை முடித்துவிட்டு என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் ஓடிவிட்டார். மாறாக கார் டிரைவர்தான் உதவினார்.
இச்சம்பவம் குறித்து ரேபிடோவின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டபோது, காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.
“ரேபிடோவுக்கு எதிராக என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் பைக் ஓட்டுபவர்கள் பொதுவாக மிகவும் கவனக்குறைவாக ஓட்டுகிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை விரும்புவோர் இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவு வைரலானதை அடுத்து பயனர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.