லெபனானில் நடைபெற்ற தாக்குதலில் கடுமையாக காயமடைந்திருந்த பிரான்ஸ் படைவீரர் அனிசெட் ஜிரார்டின் (Anicet Girardin) இன்று உயிரிழந்தார் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இவர் திங்கள்கிழமை லெபனானிலிருந்து அவசரமாக பிரான்ஸூக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதலில் இவர் கடுமையாக காயமடைந்திருந்தார். இதே தாக்குதலில் ஏற்கனவே பிரான்ஸ் படைவீரர் ஃப்ளோரியன் மொன்டோரியோ (Florian Montorio) உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ 132வது படைப்பிரிவைச் சேர்ந்த அனிசெட் ஜிரார்டின், லெபனானில் ஏற்பட்ட காயங்களால் இன்று காலை உயிரிழந்தார். அவர் பிரான்சிற்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார்,” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், “இதே தாக்குதலில் உயிரிழந்த ஃப்ளோரியன் மொன்டோரியோவிற்கு இன்று 23ஆம் திகதி மரியாதை செலுத்தும் நிலையில், அனிசெட் ஜிரார்டின் அவர்களின் தியாகத்தையும் நாடு ஆழ்ந்த உணர்வுடன் நினைவுகூர்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் காயமடைந்த மற்ற படைவீரர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்,” எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
