மனைவி பற்றி விமர்சனம் செய்த தொகுப்பாளரை நீக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்பை விமர்சனம் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் இயங்கிவரும் ஏபிசி செய்தி நிறுவனத்தின் தொலைக்காட்சி சனலின் தொகுப்பாளராக இருப்பவர் ஜிம்மி கிம்மல். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நகைச்சுவைப் பேச்சாளராகவும் இருக்கும் இவர், அந்தச் சனலில் ‘ஜிம்மி கிம்மல் லைவ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள ஹில்டன் விடுதியில் கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாகிச்சூடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அந்நிகழ்வில் கலந்துகொண்ட ட்ரம்ப், அவர் மனைவி மெலனியா ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் ஆகியோர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், அந்நிகழ்வு நடைபெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு ட்ரம்ப்பின் மனைவியான மெலனியா ட்ரம்ப்பை ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் ‘விதவையாக எதிர்பார்க்கப்படுபவர்’ என்று விமர்சித்திருந்தமை சர்ச்சையாகியுள்ளது.

ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவரது மகன் பாரோன் அங்கு அமர்ந்திருப்பதைப் போன்று வீடியோ காட்சிகளைக் காண்பித்து அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். அவர் பேசிய இரு நாள்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது சர்ச்சையானது.

இதுபற்றி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நகைச்சுவை உணர்வு இல்லாத ஜிம்மி கிம்மல், தனது நிகழ்ச்சியில் ஒரு அதிர்ச்சியூட்டும் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் பெண்மணியான மெலானியாவை ஒரு எதிர்பார்க்கப்படும் விதவையைப் போல அழகாக பொலிவுடன் இருக்கிறீர்கள் என கிம்மல் கூறியுள்ளார்.

அதற்கு ஒரு நாள் கழித்து ஒருவர் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கலந்துகொண்ட ஒருவர் இரவு விருந்தில் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றார். அந்த நபர் மிகவும் வெளிப்படையான, கொடூரமான நோக்கத்துடன் அங்கு வந்திருந்தார்.

கிம்மலின் இழிவான பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவிப்பதை நான் பாராட்டுகிறேன். அவர் சொல்வதை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால் அவர் செய்திருப்பது எல்லை மீறிய செயல். ஜிம்மி கிம்மலை டிஸ்னி மற்றும் ஏபிசி நிறுவனம் உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மெலனியா ட்ரம்ப், ‘கிம்மலின் வன்முறை நிறைந்த வெறுப்பு பேச்சுக்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டவை. என் குடும்பத்தைப் பற்றிய அவரது பேச்சு வெறும் நகைச்சுவையல்ல. அவரது வார்த்தைகள் மிக மோசமான அரசியல் சீர்கேட்டை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை.

கிம்மலைப் போன்றவர்கள் ஒவ்வொரு நாளும் வெறுப்பைப் பரப்ப நம் வீடுகளுக்குள் நுழையும் வாய்ப்பை நாம் அவர்களுக்குத் தரக்கூடாது. அவர் ஒரு கோழை. ஏபிசி நிறுவனத்துக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்.

அந்நிறுவனம் அவரைத் தொடர்ந்து ஆதரவளித்து பாதுகாக்கும் என்பது அவருக்குத் தெரியும். இதில், ஏபிசி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது. நம் சமூக நலனுக்கு எதிராகப் பேசும் கிம்மலின் நடத்தையை ஏபிசி தலைமை எத்தனை முறை அனுமதிக்கும்?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles