செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட பணி ஆரம்பமாகி மூன்றாவது நாளான இன்று – ஏப்ரல் 29ஆம் திகதி மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது.
செம்மணி அகழ்வு தொடர்பில் சட்டத்தரணி ஞா. ரனீத்தா செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்கையில்,
இன்றைய அகழ்வுப் பணிகளின் போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டு தொகுதிகளின் பகுதியளவான எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இதேவேளை அகழ்வு பணிகளின் போது சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை சுத்தம் செய்த பின்னரே எத்தனை எலும்புக்கூடு என்பதனை உறுதியாகக் கூற முடியும்.
அகழ்வு பணிகள் 1.5 அடி தொடக்கம் 2 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைய அகழ்வு பணிகளின் போது ஓரிடத்தில் சந்தேகத்துக்குரிய முறையில் கரியநிற மண் காணப்பட்டது. அதனால் இ அதனை அரிதட்டு மூலம் அரித்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறிய வலை போன்ற பொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது – என்றார்.
முன்னதாக, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கண்காணிப்பின்கீழ் கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி முதல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகின. இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழ்வு பணிகளில் 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
