கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியான்மார் நாட்டின் முன்னாள் மக்கள் தலைவரான ஆங் சான் சூகி வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
80 வயதான ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். மியன்மாரின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவரான இவர், 2021ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலமாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட அவர் இராணுவ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இராணுவ ஆட்சி தலைவர் மின் ஆங் ஹ்லைங் விடுத்துள்ள அறிக்கையில் ஆங் சான் சூகியின் எஞ்சிய தண்டனையை அவருக்கென ஒதுக்கப்பட்ட வீட்டில் அனுபவிக்கும் வகையில் குறைத்துள்ளேன்’, என்று கூறியுள்ளார்.
மியன்மாரில் 2015ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி அமைய அப்போதைய இராணுவ தலைவர்கள் இடம் கொடுத்தனர். தேர்தல் மூலமாக ஆங் சான் சூகி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவராக இருந்தார். 2021ஆம் ஆண்டு மீண்டும் இராணுவ ஆட்சி வலுப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். அந்த ஆண்டு அவரின் ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் மோசடியானது என்று அவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஆங்சான் சூகிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
